Tuesday, May 15, 2007

சூடும் சுவையும் நிறைந்த சட்டசபை

தமிழக சட்டசபையின் நீண்ட நெடிய பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று மறுதேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் பட்டது.

13வது சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 20ந் தேதி ஆளுனர் உரையுடன் தொடங்கியது. 27ந் தேதி வரை 6 நாட்கள் அந்த கூட்டத் தொடர் நடந்தது. பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி தொடங்கி, நேற்று மே 14ந் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடர் 35 நாட்கள் நடைபெற்றது.

ஆளுனர் உரையுடன் தொடங் கிய கூட்டத் தொடரில் விவாதங் களில் பங்கேற்காத பிரதான எதிர்க் கட்சியான அதிமுக, பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றது.

உள்ளாட்சி தேர்தல் முறைகேடு களை கண்டித்து, அந்தத்துறை குறித்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற 2 நாட்களும் அதிமுக உறுப்பினர்களும், அதன் தோழமை கட்சியான மதிமுக உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். விவாதத்தில் கலந்து கொண்ட பின்னர், வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதிலுரையை புறக்கணித்தனர்.

இதே போல இடஒதுக்கீட்டு சட்டம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வந்த போது, பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அந்த கட்சியின் உறுப்பினர்கள் தினமும் சட்டமன்றத்துக்கு சைக்கிளில் வந்ததும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 41 நாட்கள் நடந்த இந்த கூட்டத் தொடர்களில் சுமார் 166 மணி நேரம் அவை நடந்தது.

ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதலமைச்சர் 1 மணி, 23 நிமிட நேரம் பதிலளித்தார். பட்ஜெட் மீது நடந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் 57 நிமிடம் பதிலளித்தார். 51 மானிய கோரிக்கைகள் மீது விவாதம் 26 நாட்கள் நடைபெற்றது. இதில் 223 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காவல் துறை மானிய கோரிக்கை மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கை மீது முதலமைச்சர் மொத்தம் 2 மணி 22 நிமிடம் பதிலளித்தார்.
மானிய கோரிக்கை மீது மற்ற அமைச்சர் கள் 18 மணி நேரம் பதிலளித்தனர். இதில் 1 மணி 50 நிமிடம் உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். இதுதான் அமைச்சர்கள் பதிலுரையில் அதிக நேரமாகும்.

இந்த கூட்டத் தொடர்களில் மிக அதிக நேரம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இவர்கள் 61 முறை, 18 மணி 55 நிமிடம் பேசினார்கள். இதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்கள் 52 பேர், 18 மணி, 18 நிமிடம் பேசியுள்ளனர். மூன்றாவதாக பாமக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிட்டியது. இவர்கள் 45 முறை, 11 மணி 52 நிமிடம் பேசினார்கள்.
ஆளுங்கட்சியான திமுக உறுப்பினர்கள் 53 முறை விவாதத்தில் பங்கேற்ற போதிலும், 11 மணி 13 நிமிடம் தான் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிரதிநிதித்துவத்துக்கு தகுந்தமாதிரி மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரே ஒருநாள் வந்து லாபியில் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

ஒரே உறுப்பினரை கொண்ட தேமுதிக இந்த விவாதங்களில் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் உறுப்பினர் விஜயகாந்த் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வந்த போதிலும், அவர் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை.

அதிமுக உறுப்பினர் எஸ்.வி. சேகர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. அவர் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் அவைக்கு வந்த போதிலும், விவாதம் எதிலும் பேசவில்லை. அதே போல மதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.கண்ணப்பனும் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வந்தார். இலங்கை தமிழர் பிரச்சனையில் பேசியது தவிர, அவர் முக்கிய விவாதம் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

அதிக வினாக்களை தொடுத்தவர்கள் வரிசையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவை தங்கம் முதலிடத்தில் உள்ளார். இவர் 4,210 வினாக்களை தொடுத் துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்கள் ம. குணசேகரன் (3772 வினாக்கள்), டி. ஜெயகுமார் (1992 வினாக்கள்) ஆகியோர் உள்ளனர். அடுத்த இரண்டு இடத்தை பாமக உறுப்பினர்கள் தமிழரசு, ஆறுமுகம் ஆகியோர் பிடித்தனர்.

மொத்தம் 19 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னங்களும், 43 தகவல் கோரல் முறையில் பிரச்சனைகளும் அனுமதிக்கப்பட்டன. 30 சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்யப் பட்டு, 29 நிறைவேற்றப் பட்டன. அரசினர் தனி தீர்மானம் ஒன்றும் நிறைவேறியது. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று சபாநாயகர் மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப் பட்டு, தோற்கடிக்கப்பட்டது.

பொதுவாக எதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கு பேசுவதற்கு மிக அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. இடையில் ஒருநாள் ஏற்பட்ட அமளியை அடுத்து சில நாட்கள் அதிமுகவுக்கு ஒருநாளைக்கு ஒரு உறுப்பினர் மட்டும் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அலுவல் ஆய்வு குழுவில் எடுத்த முடிவின்படி 2 உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதிமுக உறுப்பினர்களின் நேர விஷயத்தில் கறாராக இருந்த சபாநாயகர், தோழமை கட்சி உறுப்பினர்கள் விஷயத் தில் அத்தகைய கண்டிப்பை கடைப் பிடிக்கவில்லை என்பது கண்கூடாக தெரிந்த உண்மை. அதே சமயம் துணை சபாநாயகரோ, யாருக்கும் தயவு தாட்சண்யம் காட்டாமல் ஒதுக்கப்பட்ட நேரத்துடன் உறுப்பினர்களின் பேச்சை நிறுத்தி, கட்டுப்பாட்டுடன் சபையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீண்ட நெடிய பேரவை கூட்டத் தொடரின் போது நடந்த அமளியில் அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுமைக்கும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பும் ஒருநாள் நடந்த அமளியில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் கூட்டத் தொடர் முழுமைக்கும் நீக்கிவைக்கப்பட்டார்.

அந்த நேரங்களில் முதலமைச்சர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர் அவையில் இருந்த நேரங் களில், விவாதங்களில் சூடு பறந்தால், அதை தமக்கே உரிய சமயோசிதத்துடன், நகைச்சுவையுடன் குறுக்கிட்டு, நெருப்பு மீது தண்ணீர் தெளித்து சூட்டை தணிப்பது போல இயல்புநிலைக்கு கொண்டுவந்த நிகழ்வுகளுக்கும் இந்த கூட்டத் தொடரில் பஞ்சமில்லை.
பொதுவாக ஆளும்கட்சியும், எதிர்க் கட்சியும், எலியும், பூனையுமாக கருதப்படும் நிலையில், முதலமைச் சரின் நகைச்சுவை மிளிர்ந்த “கமெண்ட் களை' எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புன்னகையுடன் ரசித்துக் கேட்டு கொண்டிருந்ததையும், எதிர்க்கட்சி யினரின் குற்றச்சாட்டுகளை, அமைச் சர்கள் பல நேரங்களில் சிரித்து கொண்டே கேட்டு கொண்டிருந்ததை யும் இந்த கூட்டத் தொடர் முழுமைக் கும் காண முடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக சில மூத்த அமைச்சர்களும், எதிர்க்கட்சி வரிசையில் சில மூத்த உறுப்பினர்களும் அவையிலேயே சகஜமாக உரையாடியதும் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்து வதாக அமைந்தது. ஆனால் இந்த நாகரீகம் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையே இல்லாதது ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பல விவாதங்களில் கலந்து கொண்ட துடன், பல நேரங்களில் விவாதங் களின் போது இடையில் குறுக்கிட்டு, நகைச்சுவையுடன் கருத்துக்களை எடுத்துரைத்ததன் வாயிலாக அவருள் ஒளிந்திருந்த இப்படியொரு திறமை வெளிப்பட்டது.

முதலமைச்சரின் சட்டமன்ற பணி பொன்விழாவுக்காக இடையில் 2 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தை தவிர, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்ற நாட்களில் அவைக்கு வந்து விவாதத்தில் கலந்து கொண்டது பாராட்டத்தக்கதாகும்.

நன்றி: மாலை சுடர்
http://www.maalaisudar.com/1505/pol_news_4.shtml

No comments: