Thursday, January 21, 2010

கருணாநிதிக்கு மோசடி செய்ய தெரியவில்லை: ஜெயலலிதா

நான் சபாநாயகருக்கு வணக்கம் செலுத்துவது போலவும், பதிலுக்கு சபாநாயகர் வணக்கம் வைப்பது போலவும் திமுகவின் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் பழையது. இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


படம்: நன்றி: தட்ஸ்தமிழ்

சபாநாயகருக்கு நான் வணக்கம் கூறியபோது பதிலுக்கு அவர் வணக்கம் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார்.

மேலும், திமுகவின் முரசொலி நாளிதழில் சபாநாயகர் ஜெயலலிதாவைப் பார்த்து வணக்கம் சொல்வதைப் போன்ற ஒரு படமும் வெளியிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜெயலலிதா அளித்துள்ள விளக்க அறிக்கை:

நான் வணக்கம் தெரிவித்தால், முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக் கூட சபாநாயகர் மறுக்கிறார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சபாநாயகருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

அது கருஞ்சிவப்பு-நான் அணிந்திருந்தது கரு நீலம்..

வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ்சிவப்பு. ஆனால், கடந்த 11ம் தேதி அன்று நான் சட்டசபையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன்.

நான் அன்று சட்டசபையில் பேசிய காட்சிகள் அனைத்து, டிவிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாக தெரியும்.

கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன், நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நான் சபைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என் குற்றச்சாட்டு.

இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். (இதை ஜெயலலிதா இப்போது தான் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது)

சபாநாயகரைக் கடிந்தார் முதல்வர்..

கடந்த 8ம் தேதி அன்று நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது கூட சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்த போது அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக சபாநாயகரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார்.

இதனால் தான் கடந்த 11ம் தேதி நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம், இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். கடந்த 8ம் தேதி அன்று நான் கலந்து கொண்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம்.

இது மிகப்பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார். இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை.

பத்திரிகைகளுக்கு வண்ணப்படத்தை கொடுத்து மாட்டிக் கொண்டு விட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Saturday, January 16, 2010

பணிகளை ஸ்டாலின் தொடர வேண்டும் : கருணாநிதி

நாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.


திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. திருவள்ளுவர் விருது - ஐராவதம் மகாதேவன், பெரியார் விருது - நக்கீரன் கோபால், அம்பேத்கர் விருது- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அண்ணா விருது - அவ்வைநடராஜன், காமராஜர் விருது - சொக்கர், பாரதியார் விருது - ராமச்சந்திரன், பாரதிதாசன் விருது- தமிழ்தாசன், திரு.வி.க.விருது - அண்ணாமலை என்ற இமையம், கி.ஆ.பெ.விசுவநாதர் விருது - தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது: திருவள்ளுவர் விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், கல்வெட்டுகளில் தமிழக வரலாறையும், முன்னோடிகளின் வரலாறையும் பதித்தவர். பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அண்ணா விருதும் பெறும் அவ்வை நடராஜன் தமிழுக்காக அரும்பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ் மீது அளவற்ற அன்பும், பற்றும் கொண்டவர். காமராஜர் விருது பெறும் சொக்கர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுபவர். பாரதிதாசன் விருது பெறும் தமிழ்தாசன் பேசும் போது, "நெல்சன் மண்டேலா, ஜோதிபாசு, பெரியார் போன்றவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் சமுதாய பணிகளில் ஈடுபட்டனர்' என்ற உவமையை கூறினார்.


நான் அரசியலிலிருந்து விலகி விடுவேனோ என்ற அச்சம் தமிழ்தாசனை அப்படி பேச வைத்துள்ளது. ஜோதிபாசு உடல்நலம் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் வழியில் நடக்க விரும்புகிறேன். கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும் போது, "தனது கணவர் அறவாணன் எனது தமிழ் தொண்டுக்கு உதவியாக இருந்தார்' என, கூறினார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் உண்டு என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த உண்மை. நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

Monday, January 11, 2010

சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை - கருணாநிதி

"சரித்திரக் கீர்த்திமிக்க இந்த சட்டசபையில் இருந்து வெளியேறப் போகிறோம். அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய சட்டசபையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, இந்த சட்டசபையில் நடக்கும் கடைசி கூட்டம் என்பதால், துணை முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தியதும், முதல்வர் கருணாநிதி, இந்த சட்டசபையின் வரலாறு பற்றி பேசியதாவது:நான் உட்பட நாம் எல்லாம் சேர்ந்து, இந்த அவையில் இருந்து வெளியேறப் போகிறோம். நம்மை யாரும் வெளியேற்றாமலேயே நமது விருப்பப்படி வெளியேறப் போகிறோம். சிலபேர் வெளியேறுவதற்காக வந்து, அப்படி வெளியேறியவர்களையும் சேர்த்து, அழைத்துக் கொண்டு வெளியேறப் போகிறோம்.

இங்கு நடக்கும் இறுதிக் கூட்டத் தொடர் இது என்பதால், இந்த சபையின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.டில்லியில் உள்ள செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மொகாலய பேரரசின் மிகப்பெரிய சின்னம்.


அதைப்போல, சென்னையில் உள்ள இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சின்னம். 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக் கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. கடந்த 1678ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத் தொன்மையான, "புனித மேரி ஆலயம்' கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் தான், 1753ல் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்தது. 1687 முதல் 1692 வரை, கவர்னராக "யேல்' இருந்த போது தான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டைக் கொடிமரத்தில், கம்பெனி கொடிக்குப் பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.கடந்த 1919ல், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன், தற்போதைய சட்டசபைக் கூட்ட மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. எனவே, இதற்கும் ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடலாம் போல் தெரிகிறது.


ஓமந்தூராருக்குப் பின், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் இந்த கோட்டையில் முதல்வராக வீற்றிருந்திருக்கின்றனர். 1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்ற நான், 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்துள் ளேன்.அதன்பின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தமிழக சட்டசபையில், சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானங்கள், சட்டங்கள், முடிவுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெற வழி செய்யும் தீர்மானம், 1921ல் நிறைவேறியது. ஆதிதிராவிடர்களை, "பஞ்சமர், பறையர்' என்ற சொற்களால் குறிப்பிடுவது அரசு ஆவணங்களில் தவிர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் 1922ல் நிறைவேறியது.


ஆலயங்கள் நுழைவுச் சட்டம் நிறைவேறியதும் இந்த சபையில் தான்.இந்த சபையில், தமிழக மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப சட்டங்களை வகுப்பது, ஆட்சியை நடத்துவது என்ற முறை அன்று இருந்தது. அது இன்றைக்கும் இருக்க வேண்டுமென்ற முனைப்போடு தான், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளோம்.ஒரு கருத்தைச் சொன்னால், அதனால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும், ஆகவே அந்தக் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, அக்கருத்துக்களை சொல்வது தான் சிலாக்கியமானது என்பதை உணர்ந்து, நான் அறிந்தவரையில் எனது வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.

அதை இந்தச் சட்டசபையிலும் கடைபிடித்து வருகிறேன். இந்த சபையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அவை எனனென்ன என்று பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை.அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் குடி செல்லும் புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு, மக்களை பற்றிய நினைவுடன் நமது பணியை அங்கு துவங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

More Links

TN Assembly

Chronology - Fort.St.George

State Legislature - Origin and Evolution