Tuesday, June 5, 2007

தமிழ்நாடு காங்கிரஸ்: கிருஷ்ணசாமி விலகல் ?

வேட்பாளர் அறிவிப்பில் கடும் அதிருப்தி கிருஷ்ணசாமி விலகல்? சோனியாவிடம் ராஜினாமா அளிக்க திட்டம்

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு போட்டியிட, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் பி.எஸ்.ஞானதேசிகனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஞானதேசிகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனேயே கிருஷ்ணசாமியும், அவரது மகன் விஷ்ணு பிரசாத்தும் அங்கு சோனியா காந்தியை சந்தித்து பேசுவதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் கிருஷ்ணசாமி முடிவெடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரசில் பல்வேறு கோஷ்டிகள் இயங்கி வருகின்றன. இந்த கோஷ்டிகளின் காரணமாக கட்சியில் பூசல்கள் அவ்வப்போது வெடிப்பது வழக்கம். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 பேரில் ஒருவர் காங்கிரசிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்.

திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, அதிமுக சார்பில் மைத்ரேயன், இளவரசன் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப் பட்டு அவர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து விட்டனர். காங்கிரசில் ஒரு இடத்திற்கு வழக்கம் போலவே கட்சியில் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி அந்த சீட்டை பெற்று விட பெரும் முயற்சி மேற் கொண்டார்.

அதே சமயம் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நட ராஜனும் அதற்கு முயற்சித்து வந்தார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. அன்பரசு உட்பட பலரும் இந்த ஒரு இடத்திற்கு போட்டியிட்டனர். ஆனால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஓசைப்படாமல் தனது ஆதரவாளரும், தற்போதைய எம்.பி.யுமான ஞானதேசிகனுக்கு அந்த சீட்டை பெற்றுத் தந்து விட்டார்.

ஞானதேசிகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கிருஷ்ண சாமியும், ஜெயந்தி நடராஜனும் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. ஜெயந்தி நடராஜனை விட கிருஷ்ணசாமி பெரும் ஏமாற்ற மடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ணசாமியும், அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத்தும் நேற்று மாலை உடனடியாக ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கட்சியின் மேலிட நிர்வாகி அகமது பட்டேலை சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில தலைமையை உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுவதாக உள்ளது என்றும், மாநில தலைவராக தான் இருந்த போதிலும் இன்னும் நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் இருப்பதற்கு ஜி.கே.வாசனின் முட்டுக்கட்டைதான் காரணம் என்று கிருஷ்ணசாமி சுட்டிக் காட்ட வுள்ளதாக தெரிகிறது.

மாநிலங்களவை இடத்தை வாசனின் ஆதரவாளருக்கு மீண்டும் அளித்திருப்பது தங்களை கட்சி மேலிடம் உதாசீனப்படுத்துவதையே காட்டுகிறது என்றும், இதன் காரணமாக கட்சியில் உள்ள அன்னிய பிரதிநிதிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அகமது பட்டேலிடம் எடுத்துச் சொல்ல விருப்பதாக தெரிகிறது.

தாங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டதை கண்டித்தும், எந்தவித அதிகாரமும் இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதை விட அதை ராஜினாமா செய்வதே நல்லது என்று கிருஷ்ணசாமி கருதுவதாகவும், அநேகமாக இன்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஞானதேசிகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதை புறக்கணிக்கும் விதமாகவும், கிருஷ்ணசாமியும் அவரது மகன் விஷ்ணு பிரசாத்தும் டெல்லி சென்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன.

ஜி.கே.வாசனுடன் காங்கிரஸ் மேலிட பிரதிநிதி வீரப்ப மொய்லியும் சேர்ந்து கொண்டு கட்சித் தலைமை யிடம் தவறான தகவல்களை சொல்லி ஒவ்வொரு முறையும் மற்ற பிரிவினருக்கு அநீதி இழைத்து வருவதாக கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

இதற்கு தங்களது எதிர்ப்பை மேலிடத்திடம் எப்படியும் தெரிவித்து விடுவது என்ற நோக்கத்துடன் கிருஷ்ண சாமியும், அவரது மகனும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக் கின்றன.

Nandri: MaalaiSudar

No comments: