Monday, August 25, 2008

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் - தங்கபாலு

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் வரவேற்று அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் குடும்பத்தினர் வீதியில் வறுமையில் வாடுவதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வீடு, நிதி உதவி மற்றும் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்பட் டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா, சேலம் புதிய உருக்காலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா, ஈரோட்டில் நடை பெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் இருதலைவர் களும் கலந்து கொள்கிறார்கள். இது பற்றிய முழு விவரம் நாளை அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல். அது கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றக்கூடிய கப்பல். அந்த பாதுகாப்பான கப்பலில் பயணம் செய்த இடதுசாரிகள் திடீரென கடலில் குதித்து விட்டார்கள்.

இப்போது அவர்கள்தான் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் காங்கிரஸ் கட்சி மூழ்குவதுபோல தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற சக்திகள் கைகோர்த்து நிற்கின்றன. எனவே மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும்.

காங்கிரஸ் கூட்டணியில் தான் பாமக உள்ளது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியும் அதைத்தான் கூறி வருகிறார். பாமக இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று முதல்வரே கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாட்டில் எல்லா மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் நாங்கள் வரவேற்று கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

மேற்கு வங்கம், கேரளா சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எங்களை எதிர்ப்பது போல இடது சாரிகள் பாவனை செய்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மனம்மாறி விடுவார்கள். 3வது அணி என்பது ஒரு கற்பனையே. அதுசாத்தியமாகாது. அது இடதுசாரி களுக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார் கே.வீ.தங்கபாலு.

செய்தி: நன்றி: Maalaisudar

No comments: