Thursday, May 15, 2008

மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி

முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை திடீரென போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர் மருத்துவமனைக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் கருணாநிதி கழுத்து வலி மற்றும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து திரும்பும் வரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சென்றாரா அல்லது அங்கு அனுமதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க சென்றாரா என்று பத்திரிகை வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் கிளம்பியது.

இதனிடையே இந்த தகவல் கேள்விப்பட்டு, அமைச்சர்கள் பலர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தனர். அமைச்சர்களின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கழுத்து வலி மற்றும் முதுகு வலி சிகிச்சைக்காக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும், அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் கருணாநிதி கடந்த சில நாட்களாக கழுத்துவலி மற்றும் முதுகுவலியால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்.

மருத்துவமனையில் சில நாட்களேனும் தங்கியிருந்து உரிய சிகிச்சையை பெற வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி சொன்னதன் காரணமாக இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே சிகிச்சை நிறைவடைந்து திரும்பும் வரை அவரை யாரும் தொந்தரவு செய்திட வேண்டாம் என்றும், அவர் நலம் பெற முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் அனைவரையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: மாலைசுடர்

No comments: