Thursday, December 20, 2007

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு - லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
.
திமுக கூட்டணியில் பெருமளவு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுக எதிரணி அரசியலில் முதல் இடத்தில் உள்ளதாகவும் பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர்.

மாற்று அரசியல் பண்பாடு நோக்கி என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மாநில அளவில் 6 மாதத்திற்கு ஒருமுறை கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை திரட்டியுள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

75.3 சதவீதம் பேர் ஆதரவாகவும், இதில் தொலைநோக்கு இல்லை என்று 24.7 சதவீதம் பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர். ரூ.2 அரிசி 90.1, இலவச நிலம்64.5, இலவச டிவி43.3, முதியோர் உதவி தொகை 82.4, சத்துணவு முட்டை92.7, இலவச கேஸ்72.6, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு66.3.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் திருப்தி இருப்பதாக 51.5 சதவீதம் பேரும், திருப்தி இல்லை யென்று 48.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் விரிசல்

திமுக கூட்டணியில் விரிசல் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளதாக 73.6 சதவீதம் பேர் கருதுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது என 51.2 சதவீதம் மக்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சியாக அதிமுக 52.2 சதவீதமும், தேமுதிக 48.5 சதவீதமும், மதிமுக 39.3 சதவீதமும், பிஜேபி 12.9 சதவீதமும் நன்றாக செயல்பட்டிருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தோழமைக் கட்சியாக பாமக 40.8, காங்கிரஸ் 15.6, இடதுசாரிகள் 39.5 சதவீதம் நல்ல செயல்பாடு என கருத்து நிலவுகிறது.

காங்கிரசின் செயல்பாடு மோசம் என்று 50.7 சதவீதம் பேர் கருதுகின்றனர். திமுக ஆட்சி அடுத்த மூன்றரை ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்று 71.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மூன்றாவது அணி

தமிழகத்தில் காங்கிரஸ்தேமுதிக சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு 36.7 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. பிஜேபியும், தேமுதிகவும் சேர 12.6 சதவீதமே ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணிக்கு 5.2 சதவீதமும், பிஜேபி, தேமுதிக, பாமக, மதிமுகவுக்கு 4.3 சதவீதமும் ஆதரவு கிடைக்கிறது.

பலமான அணியாக மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என 35.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

அடுத்த முதல்வர் யார்?

கருணாநிதிக்கு பின் அடுத்த முதல்வர் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கே அதிகமாக உள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அவருக்கு 32.1 சதவீதம் ஆதரவு உள்ளது. ஸ்டாலினுக்கு 27.9 சதவீதம் பேரும், விஜயகாந்துக்கு 24.3 சதவீதம் பேரும், தயாநிதி மாறனுக்கு 6.2 சதவீதம் பேரும், ராமதாசுக்கு 5.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என 53.8 சதவீதம் பேர் கருதுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக தேர்தல் வரும் என்று 27.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என 34.1 சதவீதம் பேரும், அப்படி அமைந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என 21.1 சதவீதம் பேரும் கருதுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போது வந்தால் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் அணியே வெற்றி பெறும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். பிஜேபி அணி 19.3 சதவீதம், மூன்றாவது அணி 7 சதவீதம், கருத்து சொல்ல முடியாது 20.3 சதவீதம் என்ற அளவிலும் கருத்து நிலவுகிறது.

அடுத்த பிரதமர்

அடுத்த பிரதமராக சோனியாவுக்கே வாய்ப்புள்ளது என 37.8 சதவீதம் பேர் கூறுகின்றனர். வாஜ்பாய்க்கு 15.3, மன்மோகன் சிங்கிற்கு 13.7, ராகுலுக்கு 10.6, அத்வானிக்கு 6.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் மிகவும் பயனுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று 72.4 பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

கடல் வளம் பாதிக்கும் என 11.2 சதவீதம் பேரும், வணிக ரீதியில் வெற்றி பெறாது என 8.1 சதவீதம் பேரும், இந்த பணத்தை கிராமப்புற சாலைகளை அமைக்க பயன்படுத்தலாம் என 6.9 சதவீதம் பேரும், மொத்தம் 26.2 சதவீதம் பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு கேபிள் டிவி

அரசு கேபிள் டிவிக்கு ஆதரவு உள்ள போதிலும், அதை தொடங்குவதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக 49.3 சதவீதம் பேர் கருதுகின்றனர். அரசின் செயல்பாடு நிதானமாக உள்ளது என 31.8 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியில் காலாவதியாகும் இந்த திட்டம் வீண் வேலை என 16.2 சதவீதம் பேர் கருதுகின்றனர். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் 62.7 சதவீதம் பேர்.

எம்ஜிஆரே சிறந்த முதல்வர்

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் தாங்கள் அறிந்த வரை சிறந்த முதல்வராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆரே என 40.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கருத்துக் கணிப்பின்படி முதல்வர்களில் தரவரிசை வருமாறு: எம்ஜிஆர் 40.8, காமராஜர் 29.9, கருணாநிதி 17.4, ஜெயலலிதா 7.6, அண்ணா 4.6.

விஜயகாந்துக்கு முதலிடம்

நடிகர்கள் அரசியலில் ஈடுபட எதிர்ப்பு பெருமளவு உள்ளது. எனினும் அரசியலில் குதித்துள்ள நடிகர்களில் விஜயகாந்துக்கு பேராதரவு உள்ளது.

அவருக்கு 47.9 சதவீதம் பேரும், சரத்குமாருக்கு 4.3 சதவீதம் பேரும், கார்த்திக்கிற்கு 4.1 சதவீதம் பேரும், விஜய டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேரும் ஆதரவு அளிக்கின்றனர்.

நடிகர்கள் தனிக்கட்சி தொடங்க 45.3 பேர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். ஆதரவாக 34.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியலில் ஈடுபடலாமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடலாமா? என்ற கேள்விக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தொடர்ந்து முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், நேரடியாக அரசியலில் வருவதை விரும்பவில்லை என்றும் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட 45.2 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என 23.8 சதவீதம் பேரும், சமூக சேவையில் ஈடுபடலாம் என 14.2 சதவீதம் பேரும், நேரடி அரசியலில் குதிக்கலாம் என 11.3 சதவீதம் பேரும் யோசனை தெரிவித்துள்ளனர்.

ரஜினி வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என 51.4 சதவீதம் பேர் கூறுகின்றனர். இதுவரை நடித்தது போலவே நடிக்க வேண்டும் என்று 36.3 சதவீதம் பேரும், படங்களை இயக்கலாம் என 8.9 சதவீதம் பேரும், நடிப்பை சொல்லி தரலாம் என 2.2 சதவீதம் பேரும் கூறுகின்றனர்.

தமிழ் பெயர்களை வைக்கும் திரைப் படங்களுக்கு வரிச் சலுகையை கைவிட வேண்டும் என்று 52.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதற்கு ஆதரவாக 11.6 சதவீதம் பேர் உள்ளனர்.

நன்றி: செய்தி: மாலைச்சுடர்

No comments: