Tuesday, November 17, 2009

விடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம் - கருணாநிதி

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.க. சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும்; டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணியும், பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் பேரணிகளை நடத்தியதை தொடர்ந்து மதுரையில் டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதராஜப்பெருமாள், பிளாட் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்ட மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் பலர் போராளிகளிடையே சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை.

முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர்.

அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார்.

அதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக மாத்தையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியும், டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும், பத்மநாபாவை கொன்றும், தொடக்கத்திலிருந்து போராளி துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் பலியாக்கியும், ரெலோ இயக்கத்தை சேர்ந்த மனோ மாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்க யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும் மரணக் குழியிலே தள்ளியும் விடுதலை புலிகள் தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு தொலைத்துவிட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்த போர்முனை சரித்திரம் சொல்லி புலம்பிக் கொண்டுதானிருக்கிறது. யார் மீதும் குற்றம் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. இலங்கையில் 2004 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் கிழக்கு இலங்கையில் பிரபாகரன், கருணா படைகளிடையே யுத்தம் ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது?

இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன?

பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது.

என்னையும், தம்பி மாறனையும் 1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.

அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில்.

அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


செய்தி: நன்றி:தினகரன்

No comments: