Friday, January 4, 2008

பிஜேபியுடன் கூட்டணி இல்லை - ராமதாஸ்

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியிலேயே பாமக இடம்பெறும் என்றும், இனி எந்த சூழ்நிலையிலும் பிஜேபியுடன் கூட்டணி சேராது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர்த்த மூன்றாவது அணியை உருவாக்கி 2011ல் பாமக தலைமை யில் கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

2007 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமைகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடியிருக்கிறோம்.

குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் எங்களுடைய போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, அரசாங்கமும் எங்களுடைய கருத்துக் களை ஏற்று செயல்படுத்தும் அளவிற்கு நாங்கள் பணியாற்றி இருக்கிறோம்.

2008 ஆம் ஆண்டை பொறுத்தவரை மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். இதற்காக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நானே வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் 3264 டாஸ்மாக் மதுக்கடைகளும், கிராமப்புறங்களில் 3433 டாஸ்மாக் மதுக்கடைகளும் உள்ளன. அந்த வகையில் கிராமப்புறங்களை மது விற்பனையில் முன்னேற்றியிருக்கிறார்கள்.

சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்த அரசாங்கம் சாதாரண, ஏழை, எளிய, உழைக்கும் மக்களிட மிருந்து சுரண்டியிருக்கிறது. எனவே தான் முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இதற்கான தேதியை இம்மாத இறுதியில் புதுவையில் நடைபெற உள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்போம்.

உடனடியாக மதுவிலக்கை அமல் படுத்தாவிட்டாலும், படிப்படியாக இதனை செயல்படுத்தலாம். முதலில் பார்களை அப்புறப்படுத்தலாம். பிறகு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். விற்பனை நேரத்தை மாலை 5 மணியுடன் நிறுத்தி விடலாம்.

மகாராஷ்டிராவில் இருப்பது போன்று உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகள் கூடாது என்று தீர்மானம் போட்டால் அங்கு கடைகளை திறக்கக் கூடாது. பொதுமக்களில் 50 சதவிகிதத் தினரும், பெண்களில் 25 சதவிகிதம் பேரும் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்பதற்கான அரசாணையை மராட்டிய அரசு பிறப்பித்துள்ளது. அதேபோன்ற அரசாணையை தமிழகத்திலும் மாநில அரசு பிறப்பிக்கலாம்.

மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்று கூறுகிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் 6 மாத காலத்திற்கு என்னுடைய யோசனை களை கேட்டு செயல்படுத்தினால் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லாமல் செய்துவிடலாம்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. 5 ஆண்டு ஆட்சி முழுமையாக நடைபெறும். 2009ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் பாமக இருக்கும்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக இல்லாத ஒரு அணியை பாமக தலைமையில் உருவாக்கி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைப்போம். இனி எந்த சூழ்நிலையிலும் பிஜேபி அணியில் இடம்பெற மாட்டோம்.

திமுக தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளுக்கு பதில் சொல்லி லாவணிக்கச்சேரி நடத்த நான் விரும்பவில்லை. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், சைதை சிவா, சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மு.ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: செய்தி: Maalaisudar

No comments: