Tuesday, January 8, 2008

2011-ல் காங். ஆட்சி: கிருஷ்ணசாமி

2011ம் ஆண்டில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அதன் தமிழக தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் போது யாருடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி இன்று அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம், மதுரையில் நடந்த கட்சியின் மண்டல மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, திருச்சி, சேலம் அல்லது கோவையிலும் மண்டல மாநாடுகள் நடைபெற உள்ளன. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மண்டல மாநாட்டில் பங்கேற்ற மேலிட பொறுப்பாளர்கள் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதை அறிந்துள்ளனர். வருங்காலத்தில் கட்சி மேலும் பலம் பொருந்திய கட்சியாக மாறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, திமுகவுடன் எங்களுக்கு கூட்டணி உள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கடந்த ஒரு வருடக்காலமாக பேசி வருகிறோம். ஆனால் இது குறித்து முதலமைச்சரும், கட்சி தலைவர் சோனியா காந்தியும் தான் முடிவு எடுக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசின் நிதியை எதிர்ப்பார்க்காமல் உடனடியாக தமிழக அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிமெண்ட் விற்பனை சிவில் சப்ளைஸ் மூலம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் சிமெண்ட் கடத்தல், அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி கடத்தலை தடுக்க ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வோம்.

மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி என்றைக்கும் தயங்கியது இல்லை. வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது எங்கள் கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச உள்ளனர்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை வசதி சரியில்லை. குறிப்பாக திருவண்ணாமலையில் சாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை செப்பனிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

>சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

நன்றி: செய்தி: Maalaisudar

1 comment:

வீ. எம் said...

2011 ல் அம்மா அதிமுக ஆட்சினு அம்மா சொல்லுது
2011ல் எங்கள் ஆட்சினு மருத்துவர் அடித்து சொல்றார்
2011ல் மக்கள் ஆட்சி என் தலைமையில் - புரட்சி கலைஞர்.
2011ல் காங்கிரஸ் ஆட்சி...

ஒரே மாநிலத்துல, ஒரே நேரத்துல, எத்தனை ஆட்சி நடக்கப்போகிறது ??தெரியல...:)

காசா பணமா....நம்மளும் அடிச்சு விடுவோம்..2011 சாம்பார் வடை தலைமையில் தமிழகத்தில் தமிழ்மணவலைப்பதிவர்கள் ஆட்சி நிச்சயம்...என்ன சொல்றீங்க?