Thursday, January 3, 2008

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் ? - சிபிஎம்

தமிழகத்தில் 3-வது அணி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும் என்று அதன் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக தேமுதிக எடுக்கும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

வரும் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கோவையில் நடைபெறுகிறது. அகில இந்திய அரசியல் சூழ்நிலை, வரவிருக்கும் மக்களவை தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் இந்த மாநாட்டில் ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி அரசை நீக்க வேண்டும்; மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்தோம்.
வரும் மக்களவை தேர்தலில் மதவெறியை எதிர்ப்பதைப் போலவே, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொருளாதார கொள்கையையும் நாங்கள் எதிர்ப்போம்.

அகில இந்திய அளவில் 3வது அணியை உருவாக்குவது குறித்து எங்களது தேசிய மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். இந்த மாநாட்டுக்கு முன்பாக மாநில அளவிலும் எங்கள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. அதன்படி இம்மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் மதுரையில் மாநில மாநாடு நடக்கிறது.

இதில் எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தலைமைக்குழு உறுப்பினர்கள் உமாநாத், கே.வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இந்த மாநில மாநாட்டில் தமிழகத்தில் கட்சியின் நிலைப்பாடு குறித்த வலுவான கொள்கைகளை முன் வைக்க உள்ளோம்.

தற்போது அகில இந்திய அளவில் மதவெறி சக்திகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஒரிசாவில் சமீபத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சேதுசமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்த மதவெறி சக்திகள் முயலுகின்றன. மதவெறி சக்திகளால் ஜனநாயகத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதிமுக தனது கொள்கைக்கு விரோதமாக வெளிப்படையாகவே பிஜேபியை ஆதரித்து வருகிறது. இது நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு பின்தங்கி உள்ளது.

50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக தொய்வு காட்டுகிறது. தரிசு நிலங்களை அவற்றின் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு மக்களுக்கு தர வேண்டும்.

தமிழ்நாட்டில் சர்வாதிகாரமா? ஜனநாயகமா? என்கிற கோஷத்தை தேர்தலில் நாங்கள் முன் வைத்தோம். ஆனால் திமுக அரசு ஜனநாயகத்தை வலுப்படுத்தவில்லை.

நன்றி: செய்தி: Maalaisudar

No comments: