Monday, March 9, 2009

தமிழகத்தின் முதன்மையான அரசியல் சக்தி அதிமுக - ராமதாஸ்

தமிழகத்தின் முதன்மையான அரசியல் சக்தியாக அதிமுக திகழ்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொள்வது, ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸின் இந்தப் பேச்சு, அவர் அதிமுகவை நோக்கி அதி வேகமாக போய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.


படம்: நன்றி: Junior Vikatan


லோக்சபா தேர்தலில் திமுக அணியில் இருக்குமா, அதிமுக அணிக்கு தாவுமா என்ற மக்கள் எதிர்பார்ப்பில் பாமக உள்ளது.

திமுக அணியிலிருந்து ராமதாஸ் விலகுவார் என்றும் பலமாக பேசப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் முதன்மையான அரசியல் சக்தி என்றும் அவர் அதிமுகவை வர்ணித்துள்ளார்.

இன்று ஜெயலலிதா சென்னையில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. முதன்மையான அரசியல் சக்தியாக திகழ்ந்து வருகிறது.

அதை வழி நடத்தி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக
இருக்கும். அது அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்தும் ..

அத்துடன் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வலிமை யான செய்தியை உணர்த்துவதாக அமையும். அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமையும்.

சர்வதேச சமூகத்திடம் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள், மிக நெருங்கிய உறவு கொண்ட தமிழகத் தமிழர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் துயர நிலை குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்தான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார்.
தற்போது இலங்கையில் மனித அவலநிலை அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டு கால இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இப்போதுதான் மனித அவலநிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் பட்டினிக் கொடுமையால் அதிக அளவில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அங்கு பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை ராணுவம் படுகொலை செய்து வருகிறது. இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு நிச்சயம் வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: