திமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..
.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.
சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்
செய்தி: நன்றி: மாலைச்சுடர்
Thursday, October 15, 2009
எம்பிக்கள் பயணத்தின் பின்னணி
Wednesday, October 14, 2009
திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே
இலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.
மாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.
பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.
திங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.
அதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.
ராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.
முகாம் நிலை குறித்து திருப்தி!:
இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.
தங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.
மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.
அவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
இலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.
பின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Monday, June 15, 2009
காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு தர முடிவு ?
தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக திமுகவில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப் படும் என்றும் இலாகாக்கள் மாற்றப் படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு, அது தற்போது வலுவடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் கூடி விவாதிப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழ்நாடு காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
தமிழக அரசில் பங்கு கேட்க காங்கிரஸ் மேலிடமும் தற்போது விரும்புவதாகவும், அதுபற்றி ஆலோசனை நடத்தி திமுக தலைமைக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசில் 7 அமைச்சர்களை பெற்றுள்ள திமுகவும், காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் பங்கு கொடுக்க முடிவு செய்து தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெறும் திமுக அரசில் காங்கிரசும் பங்கு பெற்றால், அரசு மட்டுமல்லாமல் கூட்டணியும் வலுவடையும் என்றும், இதனைக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.
திமுக அரசுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய சில எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரசை அரசில் சேர்க்கும் போது திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர் களின் பதவிகளும் பறிக்கப்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள முதலமைச்சர், அந்த அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அமைச்சர்களின் இலாகாப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கோ.சி. மணி, பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படு வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவு காரணமாக கோ.சி. மணி அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பொங்கலூர் பழனிச் சாமியின் செயல்பாடுகள் அவரது சொந்த மாவட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் தோல்வி அடைய நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரதுபதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் செய்தி விளம்பரத் துறை சரியாக செயல்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதற்கு பொறுப்பான பரிதி இளம்வழுதி மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கா. ராமச்சந்திரனின் செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சியினர் மத்தி யிலும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில அமைச்சர் களின் தலைகளும் உருளலாம் எனத் தெரிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கூட்டத் தொடர் முடிந்ததும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.
செய்தி: நன்றி: மாலைச்சுடர்
Thursday, February 19, 2009
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பழைய நண்பர் என்ற முறையில் இந்த யோசனையை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 61-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாநில செயலாளர் தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் 61 ஜோடிகளுக்கு இன்று திருவான்மியூரில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அவர்களுடன் சேர்த்து கல்வராயன் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி- வசந்தி மற்றும் விழுப்புரம் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் மகன் வினோத் - ஆனந்தவல்லி ஆகியோரின் திருமணங்களும் நடைபெற்றன.
இவற்றை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:- திருமணம் என்பதும் ஒரு கூட்டணி தான். இந்த திருமணக் கூட்டணி வெற்றிகரமாக அமைய மணமக்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த திருமண சீசன் நேரத்தில் தேர்தல் சீசனும் வந்து அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில் வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள் மலிந்து விட்டன. ஆனால் இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திமுகவுக்கு தருகின்ற ஆதரவு தான். இந்த ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் உண்மை யான வெற்றிகள் அல்ல.
பண பலம், படை பலம், ரவுடிகள் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பயன்படுத்தி தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் தருகின்ற ஆதரவு தான் காரணம். இப்போது திமுகவுக்கு அசட்டு தைரியமும், நம்பிக்கையும் உள்ளது. இதேபோல வன்முறை, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கருதுகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவுடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. இந்த கூட்டணியுடனே நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரசும், திமுகவும் நம்புகின்றன.
ஆனால் மக்களை இந்த கட்சிகள் அடியோடு மறந்துவிட்டன. உண்மை நிலவரம் என்னவென்றால் தமிழக மக்கள் திமுக மீது கடும் கோபத்திலும், வெறுப்பிலும், கொதிப்பிலும் உள்ளனர். மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களும் இமாலய ஊழல்கள் செய்வதை மக்கள் அறிவார்கள். குறிப்பாக 1 லட்சம் கோடி அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறந்துவிடவில்லை.
இந்த நேரத்தில் மக்கள் மனதில் எழுகின்ற கேள்வி இதுதான். இத்தகைய ஊழல் மலிந்த திமுக மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அந்த கேள்வி. அவ்வாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு உள்ள கோபம் காங்கிரசின் பக்கமும் திரும்பும்.
கடந்த காலத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இப்போது நடக்கும் தவறுகளையும் மறந்து மீண்டும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி கருதிவிடக்கூடாது. அவ்வாறு கருதினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத நிலை உருவாகி விடும். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அந்தப் பழைய நட்புறவைப் பாராட்டி நண்பர் என்ற முறையில் ஒரு ஆலோசனை கூறுகிறோம்.
திமுக இப்போது புதை மணலில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதனை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது. திமுக கதை முடிந்து விட்டது. புதை குழியில் மூழ்கும் திமுகவை கைகொடுத்து காங்கிரஸ் காப்பாற்ற நினைத்தால் அந்தக்கட்சியும் புதைகுழியில் சிக்கி அழியும் ஆபத்து உள்ளது.
எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிரசுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது. எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன்.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்வேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதற்கு ஆதரவு தருகின்ற கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி அல்ல, எந்த கட்சி திமுகவுடன் இணைந்து வந்தாலும் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள்.
இத்தகைய நிலையை சந்திக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி விரும்பினால் திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை அந்த கட்சி வாபஸ் பெற வேண்டும். அத்துடன் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்கு இமாலய தவறுகள் செய்யும் திமுக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்களிடம் பரிகாரம் காண வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். அந்த தீர்ப்புக்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளுக்குத்தான் லாபம். எந்த கட்சிகள் சேர வில்லையோ, அந்த கட்சிகளுக்குத் தான் நஷ்டம் என்றார் ஜெயலலிதா.
செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்
Wednesday, February 4, 2009
கோவிலுக்குப் போன திமுக அமைச்சர்கள்
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல கோவில்களில் தமிழக திமுக அமைச்சர்கள் சிறப்புப் பிரார்த்தனையிலும் பொது விருந்திலும் கலந்துகொண்டுள்ளார்கள்.
ஆக இந்தப் பிரார்தனைகள் - மருத்துவமனையில் உள்ள கலைஞரின் உடல்நலத்திற்காகவா ? (முந்தைய பதிவின் முதல் 2- 3 வரிகளைப் படிக்கவும்)இல்லை ஈழத்தமிழர் நலனிற்காகவா ? இல்லை அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவா ? பாராளுமன்ற தேர்தலுக்காகவா ? இல்லை குடும்ப ஜோசியர் சொன்னதற்காகவா ?
பேசாமல் அதிமுக, திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துவிடலாம். (15+15+10) நிச்சயம் ஜெயித்துவிடலாம்.
என்னமோ நடக்குது..! மர்மமாய் இருக்குது..!

இதனைப் பற்றிய செய்திகள்..............
அண்ணா பிறந்தநாள்: சிறப்பு வழிபாடு
சென்னை, பிப்.2: பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு நாளை (3ந் தேதி) பகல் 12 மணியளவில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை மாநகரில் உள்ள 31 முக்கிய திருக்கோயில்களில் இச் சிறப்பு வழிபாடு நடக்க இருக்கிறது. மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் பங்கேற்கிறார்.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் திருக்கோயில், நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் மற்றும் தேனாம்பேட்டை பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.
அடையாறு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் கே.என். நேருவும், திருவான்மியூர் மருந்தீஸ் வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், பள்ளியப்பன் தெருவில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமியும், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொள்கிறார்கள்.
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அமைச்சர் என்.சுரேஷ் ராஜனும், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோயில், ஆதிகேசவப் பெருமாள் கோயில் மற்றும் பெரியமேடு எல்லையம்மன் கோயிலில் அமைச்சர் பரிதி இளம்வழுதியும், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அமைச்சர் சுப. தங்கவேலனும், தம்புச்செட்டி தெருவில் உள்ள காமடேஸ்வரர் கோயில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனும், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் பங்கேற்கின்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர் மு.பெ.சாமி நாதனும், திருவேட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் தங்கம் தென்ன ரசுவும், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் என்.செல்வ ராசும், வடபழனி ஆண்டவர் திருக் கோயிலில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும் பங்கேற்கின்றனர்.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி யம்மன் கோயிலில் அமைச்சர் தமிழரசியும், மாதவப் பெருமாள் திருக்கோயிலில் மேயர் மா. சுப்பிரமணியமும் பங்கேற்கிறார்கள்.
செய்தி: நன்றி: மாலைச்சுடர்

படம்: நன்றி: தினத்தந்தி
Rationalist DMK asks ministers to do temple duty
Members of the Tamil Nadu cabinet, barring the CM and the finance minister, have an important engagement on Tuesday. They're to participate
in special prayers in temples across Chennai and partake of a community feast. As irony would have it, the occasion is the death anniversary of DMK's founder, late C N Annadurai, or Anna, a staunch rationalist.
While DMK ministers have in the past participated in community feasts, or `samapandhi bojanam' within temple precincts as part of observing Anna's anniversary, this is the first time that special prayers have been included in the programme.
"Special prayers and community feasts have been arranged in 31 important temples. The Speaker and ministers, MLAs and other VIPs are due to grace the occasion,'' said an official release. The Hindu religious and charitable endowments department also appended a list of temples and the dignitaries assigned to attend the prayers and feast in each of them.
Assembly Speaker R Avudaiyappan will be in Kapaleeswarar temple, electricity minister Arcot N Veeraswami in Gangadeeswarar temple, Purasawalkam, and local administration Stalin will visit three temples. Deputy Speaker V P Duraisamy, mayor M Subramaniam, government whip R Chakrapani and some MLAs are other DMK functionaries included in the list. CM M Karunanidhi and finance minister K Anbazhagan, the two leaders who still profess rationalism, were not due to participate in the rituals.
It could not be ascertained why the government included special prayers in the observances. Anna, a disciple of late rationalist leader Periyar E V Ramasami, had modified his strident atheism after founding DMK and opted to propagate humanism. "God is one, and humanity is one,'' became his catchphrase, but he remained a non-believer till the end.
Karunanidhi had in the past pulled up his own ministers for participating in unusual Hindu rituals like walking on burning embers during rural religious festivals. He had once criticised a DMK district secretary after noticing a dab of vermilion on his forehead. Proponents of Hinduism have criticised him often for mocking at the religion and its practices. But it remains to be seen how they will react to the entire cabinet offering worship at various temples as part of the homage they pay to their party's founder.
Tuesday, January 13, 2009
அழகிரிக்கு திமுகவை காக்கும் பொறுப்பு தரப்படும் - கருணாநிதி
காத்திரு தம்பி அழகிரி! கட்டளை வரும்.
நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
திருமங்கலம் வெற்றிச் செய்தியோடு மு.க.அழகிரி, வெற்றி பெற்ற வேட்பாளர் லதா அதியமானுடன் மதுரையிலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார்.
அவர்களுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும் உடன் வந்தார். விமான நிலையத்தில் இருந்து லதா அதியமானை திறந்த வேனில் அழைத்துக் கொண்டு அழகிரி, ஸ்டாலின் ஊர்லவமாக வந்தனர்.
படம்: நன்றி: Dinakaran
வழியெங்கும் திமுகவினர் பெரும் திரளாக கூடி வரவேற்பளித்தனர். அண்ணா அறிவாலயம் வந்ததும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் லதா அதியமான் வாழ்த்து பெற்றார்.
செய்தி: நன்றி:thatstamil
Monday, January 12, 2009
சொன்னது நடந்தது..! : மு.க.அழகிரி
40 ஆயிரம் வித்தியாசம் சொன்னது நடந்தது மு.க.அழகிரி பேட்டி
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், வாக்கு எண்ணிக்கை நடந்த மருத்துவக்கல்லூரிக்கு மு.க.அழகிரி வந்தார். அவரை ஏராளமான தொண்டர்கள் வரவேற்று, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
அழகிரியிடம் வேட்பாளர் லதா அதியமான் ஆசி பெற்றார். பின்னர், அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக அரசின் சாதனைகளுக்காகவும், ஏழைகளுக்காக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காகவும் திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. வெற்றிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள், தோழமைக்கட்சி தலைவர்கள், அயராது உழைத்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரசாரத்தின் போது, என்மீது அவதூறு பரப்பிய வைகோ மீது நான் ஏற்கனவே கூறியபடி வழக்கு தொடருவேன். ஜெயலலிதா உட்பட எதிர்க்கட்சியினர் என்மீது கூறிய அவதூறு பிரசாரங்களை மக்கள் நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசின் சாதனைகள் அதிகரித்து வருவதால், இதுவரை நடந்த 3 இடைத்தேர்தல்களிலும் வாக்கு வித்தியாசமும் அதிகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதை விட சிறப்பான வெற்றிபெறும் வகையில், 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுவோம். இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.
செய்தி: படங்கள்: நன்றி: Dinakaran

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்து இலங்கை பிரச்னை பற்றி பேசினர்.
திருமங்கலத்து யானை: கருணாநிதி கவிதை
உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார்& உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறு கண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் ஈட்டி &
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும் &குறை
பல சொல்லிப் பேசும் கும்பலை & வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் & உன்னால்
பழிதீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஓறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!
Friday, June 13, 2008
திமுக கூட்டணி: பாமக நீக்கம் ?
திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து திமுகவின் செயல் திட்ட குழு இன்னும் நான்கைந்து நாட்களில் கூடி முடிவெடுக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்திருக்கிறார். அதுவரை அமைதிகாக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் வன்முறையை தூண்டும் பேச்சு குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
.
தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டநிலையில், பாமக கூட்டணியில் நீடிக்குமா என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சேதுவின் மகன் பாலமுருகனுக்கும், நர்மதாவுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி இந்த திருமணத்தை நடத்திவைத்தார்.
திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பாமகவின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியுடன் கூட்டணி வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
இறுதியாக மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:
ஆற்காடு வீராசாமி ஒரு சிடியை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னுடைய தலையை வெட்டினால் என்ன, வீராசாமியின் தலையை வெட்டினால் என்ன? அல்லது ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரின் தலையை வெட்டினால் என்ன? மத்திய அமைச்சர் ராஜாவின் தலையை வெட்டினால் என்ன? எல்லாத்தலைகளையும் வெட்டும் போது வழிகின்ற ரத்தம்தான் என் தலையை வெட்டினாலும் வழியும். இவ்வளவு பெரிய பாதகத்தை, படுகொலையை செய்வதற்கு தயாராக இருக்கின்றார். ஒரு கட்சியினுடைய பெரிய பிரமுகர். அவர் கூட ஏதோ சங்கத்தின் தலைவர் என்று சொன்னார்.காடுவெட்டி குரு என்று சொல்கிறார்கள்.
காடுவெட்டி குரு. அவர் காடுவெட்டினாலும் சரி, மரம் வெட்டினாலும் சரி, மனிதர்களையே வெட்டினாலும் சரி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் தளபதி என்று சொல்வார்கள். அந்த தளபதியே போருக்கு தயாராகிவிட்டார். வெட்டுவார்கள், குத்துவார்கள் என்ற இந்த அச்சுறுத்தல் இன்று, நேற்றல்ல என்னுடைய ஆரம்பகால அரசியலிலேயே நான் கேட்டு, கேட்டு புளித்துப்போன சொற்கள்.
திருவாரூரில் இருந்து கிளம்பும் போதே வாய்க்கரிசியை வாங்கிக் கொண்டு புறப்பட்டவன்தான் நான் என்று சொல்வது வழக்கம். இன்று கூட ராமதாஸ் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக புகார் கூறி யிருக்கிறார். அதற்கு என்ன சாட்சி?
பெண்கள் வேண்டுமானால் வீட்டில் ஒட்டுகேட்கலாம். ஒட்டுகேட்பதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன.
மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எல்லோரும் ஓட்டு வேண்டுமானால் கேட்கலாம். ஒட்டுகேட்க முடியாது. இந்த பேச்சு ஆபத்தான பேச்சாகும். சதி திட்டம் தீட்டி இப்படி பேசியிருக்கலாம். யார், யார் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சிடியை போட்டு போலீஸ் உயரதிகாரிகள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்படிப்பட்ட கட்சியோடு எவ்வளவுநாள் உறவு என்று வீராசாமி கேட்டார். கேட்டவர் கட்சியின் பொருளாளர். அதை கேட்டவர் கட்சியின் தலைவர். இன்னொருவர் தலைமை கழகத்தின் முதன்மை செயலாளர். இவர்களெல்லாம் நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு அளிக்கின்ற உறுதிமொழி இன்னும் நான்கைந்து நாட்களில் கடலூர் மாநாடு முடிந்த பிறகு கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுவை கூட்டி இவர்களோடு (பாமக) உறவு நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கான பதிலை ஐந்து ஆறு நாட்களில் அளிப்பேன்.
ஏனென்றால் இவ்வளவு வன்முறைகளை, இவ்வளவு கடுமையான சொற்களை தாங்கி கொண்டுதான் ஒரு கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், அதைவிட அவமானம் ஒன்றும் இருக்க முடியாது. அந்த அவமானத்தை எப்படி துடைப்பது. என்பதற்கு உயர்நிலை செயல் திட்ட குழுவிலே முடிவெடுப்போம்.
உங்களுடைய கொந்தளித்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக இதனை தெரிவிக்கிறேன். அமைதியாக இதை அணுக வேண்டும். இதை பற்றி யாரும் அவரவர் வாய்க்கு வந்தவாறுயெல்லாம் பேசக்கூடாது. உண்மைநிலை தெரிகின்ற வரையில் இதை பற்றி விமர்சிக்கக்கூடாது.
நாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற வரையில், எந்த நடவடிக்கையாக, எந்த முடிவாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
செய்தி: நன்றி: மாலைச்சுடர்