Monday, June 15, 2009

காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு தர முடிவு ?

தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக திமுகவில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப் படும் என்றும் இலாகாக்கள் மாற்றப் படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு, அது தற்போது வலுவடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் கூடி விவாதிப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழ்நாடு காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

தமிழக அரசில் பங்கு கேட்க காங்கிரஸ் மேலிடமும் தற்போது விரும்புவதாகவும், அதுபற்றி ஆலோசனை நடத்தி திமுக தலைமைக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசில் 7 அமைச்சர்களை பெற்றுள்ள திமுகவும், காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் பங்கு கொடுக்க முடிவு செய்து தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெறும் திமுக அரசில் காங்கிரசும் பங்கு பெற்றால், அரசு மட்டுமல்லாமல் கூட்டணியும் வலுவடையும் என்றும், இதனைக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.

திமுக அரசுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய சில எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரசை அரசில் சேர்க்கும் போது திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர் களின் பதவிகளும் பறிக்கப்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள முதலமைச்சர், அந்த அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்களின் இலாகாப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கோ.சி. மணி, பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படு வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக கோ.சி. மணி அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பொங்கலூர் பழனிச் சாமியின் செயல்பாடுகள் அவரது சொந்த மாவட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் தோல்வி அடைய நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரதுபதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.

அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் செய்தி விளம்பரத் துறை சரியாக செயல்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதற்கு பொறுப்பான பரிதி இளம்வழுதி மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கா. ராமச்சந்திரனின் செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சியினர் மத்தி யிலும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில அமைச்சர் களின் தலைகளும் உருளலாம் எனத் தெரிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கூட்டத் தொடர் முடிந்ததும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: