Thursday, March 26, 2009

தி.மு.க. காயப்படுத்தியதால் வெளியேறினோம்: பொதுக்குழுவில் ராமதாஸ் ஆவேச பேச்சு

பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-


படம்: நன்றி: Maalaimalar

தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு. ஜனநாயக முறைப்படி உங்கள் கருத்துக்களை கேட்டோம். பா.ம.க.வில் ஒவ்வொரு தொண்டனும் மனதளவில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் காயப்பட்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான் இந்த முடிவு. வேறு எந்த கட்சி தொண்டர்களைப் பார்த்தாலும் எங்கள் கட்சி தொண்டர்கள் வணக்கம் சொல்வார்கள். அந்த நிலை இன்று தி.மு.க., மற்றும் பா.ம.க. தொண்டர்களிடம் இல்லை.

2004-ல் தோழமை உணர்வுடன் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால் கலைஞர், 34 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.

அப்படியென்றால் பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்று சொன்னார். அதையும் தாங்கிக் கொண்டு 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.

பாராளுமன்றத்தில் எங்கள் மந்திரிகள் உறுப்பினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டனர். 2006 சட்டசபை தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றோம். 13 இடங்களில் தோற்கடிக்கப்பட்டோம்.

அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை நடந்து கொண்ட செயல்பாடு பா.ம.க. தொண்டர்களை மிகவும் காயப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை தி.மு.க. எந்த நிலையிலும் காப்பாற்றவில்லை. ஆனாலும் நிபந்தனையற்ற முறையில் ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்தோம்.

குரு பேசினார் என்பதற்காக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றினார்கள். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இங்கு நாங்கள் கூட்டணியில் இல்லை.

நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரே ஒரு தடவை டி.ஆர்.பாலு என்னை சந்தித்தார். நாம் நெருக்கமாக இருப்போம் என்றார். அதன் பிறகும் எங்களை உதாசீனப்படுத்தினார்கள்.

கடந்த 20 நாட்களாக சென்னையில் தங்கி இருந்தபோதும், தி.மு.க.வில் இருந்து ஒரு மாவட்ட செயலாளரோ அல்லது ஒரு சின்ன அமைச்சரோ கூட என்னை சந்தித்து பேசவில்லை.

சந்திக்காதது மட்டுமல்ல தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று நம்புகிறேன் என பத்திரிகைகளில் ஒரு வார்த்தை கூட கலைஞர் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு செய்யலாம் என்று யோசித்தேன். பொதுக்குழுவை கூட்டி நல்ல முடிவை எடுக்கலாம் என்று கருதி இன்று உங்களால் விடிவு காணப்பட்டுள்ளது.

இது லட்சக்கணக்கான தொண்டர்கள் எடுத்த முடிவு. 1998-ல் இருந்து இன்று வரை பா.ம.க. எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்று வந்துள்ளது. மத்தியில் தொடர்ந்து பா.ம.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது.

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியும் வெற்றி கூட்டணியாக இருக்கும். 40 தொகுதியிலும் இந்த கூட்டணி வெல்லும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செய்தி: நன்றி: Maalaimalar

3 comments:

Sabapathy Anbuganesan said...

/சந்திக்காதது மட்டுமல்ல தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று நம்புகிறேன் என பத்திரிகைகளில் ஒரு வார்த்தை கூட கலைஞர் சொல்லவில்லை/எப்படி அய்யா பேசுவார் நீங்கள் காங்கிரஸ் மற்றும் அதிமுக வுடன் தனித் தனியே அணி அமைத்து பேசும்போது இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா

ttpian said...

நாற்காலிக்காரர்கள்!
நாசமாக போகட்டும்!

குருத்து said...

ஒருவழியாக கூட்டணி பேரம் உறுதி செய்யப்பட்டுவிட்டது நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது.

காங்கிரசு ஈழ விசயத்தில் துரோகம் செயதாலும், ராமதாஸ் தனது அமைச்சர்களை ஒரு பேச்சுக்கு கூடம், ராஜினாமா செய்ய சொல்லவில்லையே!

காரியவாதிகள்! சந்தர்ப்பவாதிகள்! தெளிவாக தான் இருக்கிறார்கள். நாம் தாம் குழம்பி போய் வாக்களிக்கிறோம்.