Wednesday, July 9, 2008

காமராஜர் ஆட்சி அமைப்போம்: தங்கபாலு

"நான் எந்த கோஷ்டியையும் சாரதவன், காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவேன்" என்று தமிழக காங்கிரசின் புதிய தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு, நேற்று காலை 9.28 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்றார். அவரிடம் பொறுப் பை ஒப்படைத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்தார்.



புதிய தலைவராக பொறுப்பேற்ற தங்கபாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, ஜி.ஏ.வடிவேலு, ஞானதேசிகன் எம்.பி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், காங்கிரஸ் தொண்டர்களிடையே தங்கபாலு பேசியதாவது:

எந்த குழப்பமும் இல்லாமல், கோஷ்டிகள் இல்லாமல் தமிழக காங்கிரஸ் தலைவராக செயல்படுவேன். சோனியாகாந்தியின் கரத்தை வலுப்படுத்துவதுதான் எனது லட்சியம். நான் எந்த கோஷ்டியையும் சாராதவன். எல்லா தலைவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, மக்களிடம் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்வேன். எல்லா தலைவர்களிடமும் ஒற்றுமையை உருவாக்குவேன். எல்லோரும் என்னை வாழ்த்த வந்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சோனியாகாந்தியின் தலைமையிலான ஆட்சியை கொண்டுவர அனைவரும் பாடு படவேண்டும்.

இவ்வாறு தங்கபாலு பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சோனியாகாந்தியின் கட்டளையை ஏற்று 3வது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். புதிய சூழலில் தமிழக காங்கிரசை பலப்படுத்தும் பணியை தொடருகி றேன். எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் காமராஜரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம். தமிழக காங்கிரசில் எந்த குழு அரசியலும் கிடையாது. தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்து அனைத்து தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இருவரும் 25 நிமிடம் பேசினர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 10 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

1 comment:

Krishnan said...

காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்து நின்று போட்டி இடவேண்டும். அதற்கு தில் இருக்கா ?