Tuesday, January 20, 2009

எந்த சமூகத்தையும் இழிவாகப் பேசியதில்லை - கருணாநிதி


என் இளமை காலந்தொட்டு இன்று வரை ஒரு சமூகத்தையும், பிரிவையும் கேலி கிண்டல் செய்தோ, தாக்கிப் பேசியோ எழுதியோ; நாகரீகக் குறைவாக இதுவரை நடந்து கொண்டதில்லை.
அதனால் தான் சிலப்பதிகாரத்தை "பூம்புகார்" திரைக்காவியமாக நான் எழுதிய போது, பொற்கொல்லர் மீதிருந்த பழியைத் துடைக்கும் வகையில் திரைக்கதையை மாற்றி அமைத்தேன்.




நான் தாக்கப்பட்ட போதும் கேலி செய்யப்பட்ட போதும் குற்றம் சுமத்தி எரிச்சலூட்டப்பட்ட போதும்; பதிலுக்குப் பதில் என்று பண்பற்ற முறையில் பேசிப் பழகியதுமில்லை.


1957ம் ஆண்டு குளித்தலைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தேன்.
11.7.1957 அன்று சட்டமன்ற உறுப்பினர்களின் மேசைகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்களின் பெயர்கள் அச்சியற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதை நான் படித்துப் பார்த்த போது; மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இசைவேளாளர் என்று இருந்தது. அதை தொடர்ந்து அன்று நடந்த அவை நடவடிக்கையின் ஒரு பகுதி வருமாறு:

கருணாநிதி: இங்கே வைக்கப்பட்டுள்ள பட்டியலில் சாணான் என்றும் வண்ணான் என்றும் குறிப்பிடபட்டிருக்கிறது. அதில் ன் என்ற எழுத்தை மாற்றி ர் என்ற எழுத்தைப் போட்டு பட்டியல் தயாரிக்க அரசாங்கம் முன் வருமா?

அமைச்சர் கக்கன்: கருணாநிதி சொன்னது மாதிரி மாற்றம் செய்வது தான் சரி.

அமைச்சர் சி. சுப்பிரமணியம்: ‘ன்’ என்ற எழுத்தை போட்டிருப்பதினால் மரியாதை குறைந்து விடாது. சிலர் டிரைவர் என்பதை டிரைவன் என்று மரியாதை குறைவாக சொல்வதாக நினைத்து சொல்வதுண்டு. இது அப்படி அல்ல. அவர்களின் ஜாதிப் பெயரின் படி போடப்பட்டிருக்கிறது. இதனால் மரியாதைக் குறைவு ஒன்றுமில்லை.

கருணாநிதி: இந்தப் பட்டியலிலே மருத்துவர், இசை வேளாளர் என்றெல்லாம் மதிப்பு கொடுத்து உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் சி. சுப்பிரமணியம்: அதில் மதிப்பு ஒன்றுமில்லை.

அமைச்சர் கக்கன்: இந்தப் பிரச்னை குறித்து சென்னை அரசு பரிசீலனை செய்யும் என்று இதற்கு முன்னரே நான் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் கக்கன் அன்று இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சில நேரங்களில் திமுக உறுப்பினர்களோ அல்லது திமுக அமைச்சர்களோ, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிவிட்டால்; அந்தப் பேச்சு குறிப்பை, சட்டமன்ற நடவடிக்கை குறிப்பிலிருந்து அகற்றி விடுமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் ஒரு கட்சியிடம் இன்னொரு கட்சி கடைபிடிக்க வேண்டிய அரசியல் நாகரீகம்.
ஒரு முறை எதிர் வரிசையில் இருந்த கற்றறிந்த நண்பர்; முதலமைச்சராக இருந்த என்னை நோக்கி 'உங்கள் ஆட்சி "மூன்றாந்தர ஆட்சி" என்று முஷ்டியை உயர்த்தி முரட்டுத்தனமான சொற்களை பயன்படுத்தி ஏசிட முற்பட்ட போது சட்ட மன்றத்தில் கழக அமைச்சர்களும், உறுப்பினர்களும் கடுங்கோபம் கொண்டு எழுந்து விட்டனர்; அவரை மறுத்து பேசிட!
உடனே நான் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு; ‘‘மூன்றாந்தர ஆட்சி என்று எதிர் வரிசை நண்பர் சொன்னதில் குற்றமில்லை. அவர் நமது ஆட்சியை "நாலாந்தர ஆட்சி" என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆம்! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர எனப்படும் பிரிவுகளில் இது நாலாந்தர சூத்திரர்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி என்றுதானே நண்பர் குறிப்பிடு கிறார்’’
என நான் சொன்னதும் அந்த நண்பர் உள்பட மன்றமே மவுனமாயிற்று. திருச்சியிலிருந்த தந்தை பெரியாருக்கு இந்நிகழ்ச்சி இளவல் வீரமணி மூலம் கூறப்பட்டு; அவர் என்னைப் புகழ்ந்து பெருமை கொண்டார்.

எனவே பொது வாழ்க்கையில் பதில்களே, விளக்கங்களோ, அரசியல் அறிக்கைகளோ சூடாக மட்டுமிருந்து சுவையற்று போய் விடுமேயானால்; பண்பாடும் பட்டொழிந்து போய்விடும். அண்ணா பேசிய ஒரு கடற்கரை கூட்டத்தில் என்.வி.நடராசன் பேசும்போது, 'இனிமேல் காங்கிரஸ் மந்திரிகள் வந்தால் கல் வீசுவோம்' என்று கர்ச்சனை செய்து விட்டார். மேடையிலிருந்த அண்ணா சட்டென்று எழுந்து, Ôநடராசன் இப்போது பேசிய கல் வீசுவோம் என்ற வார்த்தைகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிறகு பேசலாம் என்று கட்டளையே இட்டார். என்.வி.நடராசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் பேச முடிந்தது.

இப்படி பண்பாடும் அரசியல் நாகரீகமும் கற்றுத் தந்த ஆசானாம் அண்ணாவிடம் பயின்ற ஒருவனின் வேண்டுகோளாக நமது கட்சியை சேர்ந்தோர் உள்ளிட்ட எல்லாக் கட்சியினருக்கும் நான் பணிந்து சமர்ப்பிப்பது:

மாற்று கட்சியினரையும் மதித்திடுவோம்
‘‘மறைந்த தலைவர்களின் சிலைகளை மாசுபடுத்த மாட்டோம்’’
வில்லம்பு பட்ட புண் உள் ஆறும்; ஆறாதே சொல் அம்பு பட்ட புண்
என்பதை மறவாமல்-
விரோதிகளிடமும்;
பண்பு காட்டிடுவோம்
தவறுகளை நாம் திருத்திக் கொள்வோம்-
தவறு செய்பவர்களையும்; திருத்தத்
தயங்காமல் முற்படுவோம்!
இனியரு தவறு செய்து இழிநிலை
கொள்ள மாட்டோம்
என இன்றே சபதம் ஏற்போம்.

புதுச்சேரியில் இளம் தலைவர்
ராஜீவ் காந்தி அவர்களின்
சிலை மாசுபடுத்தப்பட்ட
அநாகரீக செயலைக்
கண்டும் கேட்டும்
இதை எழுத நேரிட்டது.


இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Dinakaran

No comments: