Thursday, May 22, 2008

பிறந்தாள் கொண்டாட தயார் - கருணாநிதி

முதல்வர் கருணாநிதி தனது பிறந்த நாளன்று தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற சம்மதம் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 3ம் தேதியன்று முதல்வருக்கு 84 வயது முடிந்து 85 வயது பிறக்கிறது.

உடல் நலம், மனநலம் சரியில்லாததால் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை, பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்க, தன்னை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால், வழக்கம்போல தொண்டர்கள் சந்தித்து முதல்வர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று நிதியமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் பலரும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் அன்பழகன் ஆணையையும், தொண்டர்கள் ஆணையையும் மீற முடியாமல், தொண்டர்கள் வாழ்த்துக்களை ஏற்க தயாராக உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட கவிதை:

முத்தமிழ் வித்தகராம்
நல்லோர்க்கும் முதுபெரும்
புலமையில் வல்லோர்க்கும்
முரசு கொட்டி மொழிப் போரில்
அணிவகுத்தோர் அனைவர்க்கும்
அரசொன்று வருமென்று கருதிடாமல்
அறப்போர்களிலே ஆவிதனை அர்பணித்தோர்க்கும்;
அகவை எண்பத்தி ஐந்தில் அன்பு குழைத்து;
அய்யன்மீர் வீரவணக்கம் செலுத்துகின்றேன்.
வழிதோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்
கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்;
அலைஅலையாய்ப் பெருகி அணிவகுத்துத்
திராவிட இயக்க அரண் காத்திட ஆர்த்தெழாமல்
அன்றைக்கு அயர்ந்திருப்பின் தீரா விடமன்றோ
நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்
ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!
போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும்
அழைத்தபோது வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;
வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!
பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்ற
பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர் பழகு தமிழில் ஆணையிட்டு
அழைத்த பிறகும் பகுத்தறிவுப் பாசறையாம் பழைய
தாய்க் கழகத்து வீர மணிக் குரலும் விரிவானமாய்
மனம் தோய்ந்து பல்லாயிரம், பல லட்சம்
உடன்பிறப்பாளர் பாசத்தை வெள்ளமாய்ப்
பாய விட்டுப் ‘‘பணிந்திடுக எம் அன்புக்கு’’ என
ஆணையிட்ட பின்னும் துணிந்து நான் துண்டிக்க முடியுமோ
உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;
அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல
‘‘தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண’’
ஒப்பிவிட்டேன். உன் வாழ்த்தினையேற்று
என் வணக்கமும் வாழ்த்தும்
வட்டியும் முதலுமாய் வழங்குவதற்கே.

செய்தி: நன்றி: தினகரன்

தினகரனின் உரைநடைபோல வெளியிடப்பட்டுள்ளதை கவிதை என்று கூறியிருந்ததால் நானே வரிகளை உடைத்து கவிதையாக்கிவிட்டேன்.கவிதையை வெட்டி ஒட்டியதில் வரிகள்/வார்த்தகள் வரி மாறி வந்திருந்தால் அதற்கு பொறுப்பு நானே :-)

No comments: