Thursday, May 15, 2008

உண்மை கசக்கத்தான் செய்யும் - ராமதாஸ்

குறைகளை சுட்டிக்காட்டினால் குழிபறிக்கிறோம் என்பதா ? - ராமதாஸ் கேள்வி

அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துவதா என்று பாமக நிறுவனர ராமதாஸ் முதல்வர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை,

3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசின் மீது 61 குற்றச்சாட்டுகளை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சுமத்தியுள்ளார். இதற்கு, எதிர்கட்சியாக அரசின் குறைகளை இடித்து சொல்லுகின்ற கடமையை திறம்பட ஆற்றுவதாக அதிமுகவுக்கு பாராட்டுரை வழங்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

அதே நேரத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, நல்வழிகாட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிப்பவர்களுக்கு 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துகிறார். ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக கடமையை செய்வதால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவதன் மூலம் எங்களை திசை திருப்பிவிட முடியாது.

"நீங்கள் எங்களின் துணை கட்சிகள். கை கட்டி, வாய் பொத்தி எங்கள் முன்னால் நிற்க வேண்டுமே தவிர கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. அதுதான் தோழமைக்கு இலக்கணம். தவறுகளை சுட்டிக்காட்டினால் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவோம். தாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை"

மாநிலத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகள் உள்பட 7 கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவது என்று முடிவெடுத்த ஒரு வாரத்தில் 5 அரசு கல்லூரிகளை கிடப்பில் போட்டுவிட்டு, கோவை மற்றும் மதுரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை மட்டும் பல்கலைகழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்தது ஏன்? எதிர்கட்சிகள் விழிப்பாக இருந்ததால் அந்த மசோதாக்கள் ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மசோதாக்களையும் அரசு திரும்ப பெற வேண்டும்.

தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்க உரிமை இல்லையா? தோழமை என்பதால் உயர்கல்வித் துறையில் நடக்கும் குளறுபடிகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளை முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளேன்.

ஆனால் உயர்கல்வி துறை செயல்பாட்டில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. உயர்கல்வியில் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கட்டண கொள்ளையும், கட்டாய நன்கொடையும் தடுக்கும் சட்டங்கள் கோட்டை அறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை என்று பழி சுமத்தினால் அதை உலகம் எப்படி ஏற்கும். நட்பு செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நெறி கடந்து செல்லும்போது முற்பட்டு சென்று இடித்துரைப்பதற்காகும் என்பது வள்ளுவரின் வாக்கு.

விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையே கசக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: