Tuesday, July 3, 2007

கூட்டணி நீடிக்கும் - ராமதாஸ் பேட்டி

நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

கூட்டணி நீடிக்கும் தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கமாட்டோம்: டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை, ஜுலை. 4-

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். சென்னையில் நடந்த மகளிர் பேரணி குறித்தும் அவர் விமர்சனம் செய்து பேட்டி அளித்தார்.

இது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வேதனையை ஏற்படுத்தியது. அவர் டாக்டர் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

நாங்கள் தி.மு.க. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம். 5 ஆண்டு காலத்துக்கு இது தொடரும் அதில் மாற்றம் இருக்காது.

நாங்கள் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கமாட்டோம். எங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது. எங்கள் நிலைமைகளை, பிரச்சினைகளை கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் எடுத்து சொல்வோம். ஆனால் அதுமாதிரி கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. பின்னர் பிரச்சினைகள் பற்றி எப்படி ஆலோசிக்க முடியும்.

இப்போதைய கூட்டுறவு தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தவித ஆலோசனையும் எங்களுடன் நடத்தப்படவில்லை. பின்னர் எப்படி தேர்தலை சந்திப்பது?

சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி எளியமக்களுக்கு தெரியும். இது பற்றி நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வரவேண்டும். ஒருவர் மட்டும் குரல் கொடுத்தால் அது போதுமானதாக இருக்காது.

நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா?

நாங்கள் துணைநகரம் பிரச்சினை, விமானநிலையம் விரிவாக்கம் பிரச்சினை, காவிரி, பாலாறு பிரச்சினைகள் போன்றவற்றில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அதாவது மக்கள் பிரச்சினைக்காக இந்த விஷயங்களில் குரல் கொடுத்தோம்.

தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Nandri: Maalaimalar

No comments: