Wednesday, June 6, 2007

பந்தை சுவரில் எறிந்தால்.....

"பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் உங்கள் பக்கம் தான் விழும்,' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:தங்கள் அறிக்கையில் வள்ளுவரின் வாக்கான "யாகாவாராயினும் நாகாக்க' என்று எழுதியிருப்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் உங்கள் பக்கம் தான் விழும்.

ஐந்து தடவை தமிழகத்தை ஆண்ட முதல்வரை 84 வயதான ஒரு மூத்தவரின் பிறந்த நாள் அன்று எத்தகைய வார்த்தைகளால் நீங்கள் அர்ச்சனை செய்திருந்தீர்கள். தி.மு.க.,க்காரன் அதைத் தாங்கிக் கொள்வானா? நீங்கள் வினை விதைத்தால் வினையை அறுத்துத் தானே ஆக வேண்டும். மற்றவர்களை வசைபாட உங்களுக்கு மட்டும் தான் உரிமையா? அதற்கு மற்றவர்கள் பதில் கொடுத்தால் வாங்கிக் கொண்டு தானே ஆக வேண்டும். மங்கல விழாவாம் ஒரு மணவிழாவில் தி.மு.க.,வை அழிப்பேன் என்று நீங்கள் சத்தியமிட்டு சபதம் எடுப்பதாக அறிக்கையும் கொடுப்பீர்கள். அதற்கு நாங்கள் பதிலளிக்கக் கூடாதா? கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த மாறன் இறந்து கிடந்த போது கூட அரசியல் நாகரிகமே இல்லாமல் தங்கள் வீட்டு வாசலில் பட்டாசு கொளுத்தினீர்களே அதற்கு பெயர் பண்பாடா?

உங்கள் அறிக்கைகளில், உங்கள் பேச்சுகளில் நீங்கள் எந்த அளவிற்கு கண்ணியமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களோ அதே அளவிற்குத் தான் எங்கள் பக்கம் இருந்தும் வார்த்தைகள் வரும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்

Nandri: Dinamalar

No comments: