இனியும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஆட்சிக்கும், உயிருக்கும் ஆபத்து என்று ஜோதிடர் கூறியதால்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருவதாக கூறி அங்கிருந்து வெளியேறப் போகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில் சிறுதாவூர் நிலப் பிரச்சினை, தன் மீதான வழக்குகள், முதல்வர் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதன் பின்னணி, புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு அவசரம் அவசரமாக மாறியதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்து பரபரப்பாக பேசினார்.
ஜெ.வின் பேச்சிலிருந்து சில பகுதிகள்..
வாழ்க்கை என்பதே ஒரு சவால். வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், சாதகம் - பாதகம் ஆகியவை, கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை, துணிச்சலுடன் எதிர்கொள்ள, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு, துவண்டு விடக் கூடாது. அவற்றை துணிவுடன் எதிர்த்தால், வெற்றி நிச்சயம்.
சவால்களை எதிர்கொள்ளும் மனோபாவம் தான், வெற்றிக்கு வழி வகுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், பாரதிக்கு இருந்ததால் தான், அவர் மகாகவியானார். பகுத்தறிவுக் கொள்கைகளை, மக்களிடம் துணிந்து பரப்பியவர், தந்தை பெரியார்.
வாழ்க்கை என்ற பயணத்தில், எல்லாமே நமக்கு சாதகமாக நடந்துவிட்டால், பிரச்சினை இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கை, யாருக்கும் அமைவதில்லை. சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்தச் சவால்களையே நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான், வாழ்க்கையில் வெற்றி அடையும் ரகசியம்.
சவாலை எதிர்த்து போராடும் துணிவே, நம்மை வாழ வைக்கிறது. இன்று வாழ்க்கையை தொடங்கியிருக்கும், 5 திருமண ஜோடிகளுக்கு மட்டுமல்ல, இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்.
திடீரென்று கருணாநிதி தான் வள்ளலாகி மாறிவிட்டதாக ஒரு தோற்றம் அளிக்கப்பார்க்கிறார். தான் குடியிருக்கும் வீட்டையே தானம் செய்யப் போகிறாராம். முதலில் என்னுடைய காலத்திற்குப் பிறகு, என் மனைவி காலத்திற்குப் பிறகு என்று சொன்னவர் இப்போது ஒரு ஜோதிடர் கூறிய அறிவுரையை கேட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ குடியேறப்போகிறார்.
இந்த வீட்டில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் ஆட்சி பறி போய் விடும் என்பதால்தான் அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, திடீரென்று அரைகுறையாக ஒரு புதிய தலைமை செயலகம் சட்டமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கட்டிடத்தை அவசர கதியில் யாராவது கட்ட நினைப்பார்களா?. சென்னைக்கு திருஷ்டிப் பரிகாரமாக அமைந்திருக்கிறது இந்தக் கட்டிடம். கேரளா மாநிலத்தில் அவ்வளவு கலை ரசனையோடு பண்பாட்டிற்கு ஏற்றவாறு அழகான ஒரு கட்டிடத்தைக் கட்டி இருக்கிறார்கள். அங்கே தான் சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் செயல்படுகிறது. கர்நாடகாவைப் பாருங்கள், விதான சவுதா, காலாகாலத்திற்கு கம்பீரமாக தோற்றமளித்து மெஜஸ்ட்டிக்காக நிற்கிறது.
ஆனால் கருணாநிதியிடம் ஒரு ஜோதிடர், பழைய சட்டமன்றத்தில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கினால் ஆட்சி பறி போய் விடும். மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கே வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால்தான் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தை கட்டி முடித்ததாக அறிவித்து திறப்பு விழா நடத்தி அங்கே போய் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு மாற்றங்களிலும் கருணாநிதியிடம் பொதுநலம் தெரியவில்லை. மாறாக சுயநலம்தான் மேலோங்கி நிற்கிறது.
என் மீது புனைந்த சொத்துக் குவிப்பு வழக்கை நான் தாமதப்படுத்தி 13 ஆண்டுகளாக என்னால் தான் தாமதப்படுத்தப்பட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறதாம். 1997-ம் ஆண்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக வந்த போது இந்த வழக்கை என் மீது போட்டார். அதன் பிறகு 1997-ல் இருந்து 2001-ம் ஆண்டு வரை அவர் தானே முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது ஏன் இந்த வழக்கை முடிக்கவில்லை?
2001-ம் ஆண்டு நான் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக வந்தேன். நான் நினைத்திருந்தால் என் மீது புனைந்த வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற்றிருக்க முடியாதா?. ரத்து செய்திருக்க முடியாதா?. ஒரு நொடிப் பொழுதில் செய்திருக்க முடியும்.
1997 முதல் 2001 வரை 4 ஆண்டு காலம் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவர் தான் அந்த வழக்கை முடிக்காமல் தாமதப்படுத்தினார். பின் 2001-ல் நான் முதல்-அமைச்சர் ஆனேன். 2003-ம் ஆண்டு அந்த வழக்கு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது.
அப்போது திடீரென்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டு, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்தார்கள். அதனால் அந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஒரு வருடம் தாமதப்படுத்தப்பட்டது. இது என்னால் நடந்த ஒரு தாமதமா?.
அதன் பின்னர் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு வழக்குகளை ஒன்றாக இணைத்தார்கள் அந்தத் தனி நீதிமன்றத்தில். அதை எதிர்த்து மீண்டும் 2005-ம் ஆண்டு அதே அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போடப்பட்டது.
2005-ம் ஆண்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதால் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியது. அந்தத் தடையாணை எத்தனை ஆண்டு காலம் இருந்தது?. இந்த ஆண்டு வரை ஐந்து ஆண்டு காலம் அந்தத் தடையாணை நீடித்தது. ஆக, அந்த வழக்கை முடிக்க விடாமல் நீட்டிக்க வைத்தது கருணாநிதி தானே தவிர நானல்ல.
அதைப் போலத் தான் சிறுதாவூர் பிரச்சினை. ஆரம்பத்திலேயே நான் இதைப் பற்றிப் பேசிய போது நான் இதை தெளிவுபடுத்தினேன். நான் எந்த நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை. சிறுதாவூரில் எனக்குச் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் நான் அங்கே தங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதை ஏற்காமல் என்னைப் பற்றி அவதூறு பரப்பவேண்டும் என்பதற்காகவே ஒரு விசாரணைக் கமிஷன் போட்டார்கள். சரி, அந்த விசாரணைக் கமிஷன் போட்ட பிறகு அந்த விசாரணைக் கமிஷன் தன்னுடைய அறிக்கையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சமர்ப்பித்துவிட்டது. அதை சட்டமன்றத்தில் வைக்கவில்லை.
சிறுதாவூர் கமிஷன் அறிக்கை வெளி வந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நான் ஒரு அறிக்கை விட்டேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தமிழில் கூட மொழி பெயர்க்கவில்லை. ஆங்கில அறிக்கையை திடீரென்று சட்டமன்றத்தில் வைத்துவிட்டார்கள். அதில் நான் நிரபராதி என்று கூறப்பட்டிருக்கிறது.
நான் நிரபராதி என்று தெரிந்து கொண்டே, தெரிந்து வைத்துக் கொண்டே என் மீது களங்கம் சுமத்தி இருக்கிறார்.
பணபலம், படைபலம், அதிகார பலம் ஆகியவற்றை, துணிவுடன் எதிர்கொள்ளும் திறமை, கழகக் கண்மணிகளாகிய உங்களுக்கு, நிச்சயம் உண்டு. அதனால் தான், "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'', என்று பாடிய எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வரியில், "அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், உன்னைச் சேரும்'' என்று பாடினார்.
நீங்கள் எல்லாம், திறமைசாலிகள் மட்டும் அல்ல, மக்கள் மீது பாசமும், நேசமும், அன்பும், மனித நேயமும், சேவை மனப்பான்மையும் உடையவர்கள், என்பதை நான் அறிவேன்.
திறமையும், உங்களது சேவை மனப்பான்மையும், நிச்சயம் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களது திறமையை, நிரூபிப்பதற்கான நேரம், வந்துவிட்டது.
வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, அ.தி.மு.க. ஆட்சி, தமிழகத்தில் அமைய, இப்பொழுதே தயாராகுங்கள். நாளைய தமிழகம், நம் கையில் என்றார் ஜெயலலிதா.
அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழாவால் அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் மயமாக காணப்பட்டது.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Monday, May 17, 2010
ஜோதிடர் பேச்சைக் கேட்டுத்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருகிறார் கருணாநிதி - ஜெ.
Monday, March 1, 2010
பாசமழையில் நனைந்த மு.க.ஸ்டாலின்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 58-வது பிறந்த நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினார். முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதியின் காலில் விழுந்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.
அவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் நிர்வாகி களும் முக்கிய பிரமுகர்களும் சர்வ கட்சி தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.திமுக பொருளாளரும் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 58-வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி ஸ்டாலின் அதி காலையிலேயே எழுந்து புத்தாண்டு அணிந்த 6 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து திமுக தலைவரும் முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து குடும்பத் துடன் கேக் வெட்டி பிறந்தநாளை மிக எளிமையான முறையில் கொண்டாடினார். இதனை தொடர்ந்து காலை 6.45 மணி முதல் அவரது வீட்டிற்கு தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர் களும் பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும், சர்வகட்சி தலைவர் களும், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுள் மத்திய மாநில அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரையுலகினர் ஆகி யோர் அடங்குவர்.வந்திருந்த தொண்டர்களும், பிரமுகர்களும் வரிசையில் நின்று பூங்கொத்து, மாலை, சால்வை ஆகியவற்றை ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.
காலை 9.45 மணிக்கு அவரது சகோதரரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் வந்து ஸ்டாலினை கட்டித் தழுவி வாழ்த்தினார். இதேபோல கனிமொழி எம்பி, மு.க.தமிழரசு ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக் கூற வந்த தொண்டர்களுக்கும், பொது மக்க ளுக்கும் பிரியாணி மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டி.யசோதா, ஞானசேகரன் எம்எல்ஏ, ஜே.எம்.ஆருண் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வை.சிவபுண்ணியம், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிஜேபியின் குமாரவேலு மற்றும் தொழிலதிபரும், கல்வியாள ருமான எம்ஏஎம் ராமசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்த சர்வகட்சி தலை வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக 58 வகையான சீர்வரிசை பொருட்களுடன் துணை முதல் வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருமார்களும் நேரில் வந்து துணை முதல்வருக்கு ஆசி கூறினர்.திமுகவின் இளைஞரணி, மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் சீருடையில் வந்து வாழ்த்தினர். அவர்கள் 58 வகையான பழ வகைகளை ஸ்டாலி னுக்கு வழங்கினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மயில் நடனம், பேண்டு வாத்தியம், முரசு, நாதஸ்வரம் உள்ளிட்ட கலைக் குழுவினரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
பெரியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் வேடமணிந்தும் வந்து தொண்டர்கள் துணை முதல்வரை வாழ்த்தினார்கள். பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்க பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட தால் ஸ்டாலின் இல்லம் உள்ள ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்
சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது. போலீசார் மிகவும் சிரமப்பட்டு அவர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்டாலின் வீட்டு எதிரே 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தனது பிறந்த நாள் விழாவுக்கு யாரும் ஆடம்பரமாக விளம்பரம் செய்யக் கூடாது, ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருந்தார். அதற்கிணங்க எந்த பகுதியிலும் ஆடம்பர பேனர் களை காணமுடியவில்லை. அவரது இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்சி கொடிகளை மட்டுமே கட்டியிருந்தனர்.
பகல் 1 மணி வரையிலும் தனது இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளும் ஸ்டாலின் அதன் பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் பள்ளிக்குச் சென்று அதன் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கிறார். பின்னர் மீண்டும் தனது இல்லத்திற்கு வந்து மாலை வரை தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.
படம்: செய்தி: நன்றி: மாலைச்சுடர்
Thursday, January 21, 2010
கருணாநிதிக்கு மோசடி செய்ய தெரியவில்லை: ஜெயலலிதா
நான் சபாநாயகருக்கு வணக்கம் செலுத்துவது போலவும், பதிலுக்கு சபாநாயகர் வணக்கம் வைப்பது போலவும் திமுகவின் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் பழையது. இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
படம்: நன்றி: தட்ஸ்தமிழ்
சபாநாயகருக்கு நான் வணக்கம் கூறியபோது பதிலுக்கு அவர் வணக்கம் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், திமுகவின் முரசொலி நாளிதழில் சபாநாயகர் ஜெயலலிதாவைப் பார்த்து வணக்கம் சொல்வதைப் போன்ற ஒரு படமும் வெளியிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஜெயலலிதா அளித்துள்ள விளக்க அறிக்கை:
நான் வணக்கம் தெரிவித்தால், முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக் கூட சபாநாயகர் மறுக்கிறார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சபாநாயகருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
அது கருஞ்சிவப்பு-நான் அணிந்திருந்தது கரு நீலம்..
வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ்சிவப்பு. ஆனால், கடந்த 11ம் தேதி அன்று நான் சட்டசபையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன்.
நான் அன்று சட்டசபையில் பேசிய காட்சிகள் அனைத்து, டிவிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாக தெரியும்.
கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன், நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நான் சபைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என் குற்றச்சாட்டு.
இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். (இதை ஜெயலலிதா இப்போது தான் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது)
சபாநாயகரைக் கடிந்தார் முதல்வர்..
கடந்த 8ம் தேதி அன்று நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது கூட சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்த போது அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக சபாநாயகரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார்.
இதனால் தான் கடந்த 11ம் தேதி நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.
கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம், இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். கடந்த 8ம் தேதி அன்று நான் கலந்து கொண்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம்.
இது மிகப்பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார். இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை.
பத்திரிகைகளுக்கு வண்ணப்படத்தை கொடுத்து மாட்டிக் கொண்டு விட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Saturday, January 16, 2010
பணிகளை ஸ்டாலின் தொடர வேண்டும் : கருணாநிதி
நாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. திருவள்ளுவர் விருது - ஐராவதம் மகாதேவன், பெரியார் விருது - நக்கீரன் கோபால், அம்பேத்கர் விருது- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அண்ணா விருது - அவ்வைநடராஜன், காமராஜர் விருது - சொக்கர், பாரதியார் விருது - ராமச்சந்திரன், பாரதிதாசன் விருது- தமிழ்தாசன், திரு.வி.க.விருது - அண்ணாமலை என்ற இமையம், கி.ஆ.பெ.விசுவநாதர் விருது - தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது: திருவள்ளுவர் விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், கல்வெட்டுகளில் தமிழக வரலாறையும், முன்னோடிகளின் வரலாறையும் பதித்தவர். பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அண்ணா விருதும் பெறும் அவ்வை நடராஜன் தமிழுக்காக அரும்பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ் மீது அளவற்ற அன்பும், பற்றும் கொண்டவர். காமராஜர் விருது பெறும் சொக்கர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுபவர். பாரதிதாசன் விருது பெறும் தமிழ்தாசன் பேசும் போது, "நெல்சன் மண்டேலா, ஜோதிபாசு, பெரியார் போன்றவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் சமுதாய பணிகளில் ஈடுபட்டனர்' என்ற உவமையை கூறினார்.
நான் அரசியலிலிருந்து விலகி விடுவேனோ என்ற அச்சம் தமிழ்தாசனை அப்படி பேச வைத்துள்ளது. ஜோதிபாசு உடல்நலம் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் வழியில் நடக்க விரும்புகிறேன். கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும் போது, "தனது கணவர் அறவாணன் எனது தமிழ் தொண்டுக்கு உதவியாக இருந்தார்' என, கூறினார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் உண்டு என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த உண்மை. நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.
செய்தி: நன்றி: தினமலர்
Monday, January 11, 2010
சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை - கருணாநிதி
"சரித்திரக் கீர்த்திமிக்க இந்த சட்டசபையில் இருந்து வெளியேறப் போகிறோம். அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய சட்டசபையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, இந்த சட்டசபையில் நடக்கும் கடைசி கூட்டம் என்பதால், துணை முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தியதும், முதல்வர் கருணாநிதி, இந்த சட்டசபையின் வரலாறு பற்றி பேசியதாவது:நான் உட்பட நாம் எல்லாம் சேர்ந்து, இந்த அவையில் இருந்து வெளியேறப் போகிறோம். நம்மை யாரும் வெளியேற்றாமலேயே நமது விருப்பப்படி வெளியேறப் போகிறோம். சிலபேர் வெளியேறுவதற்காக வந்து, அப்படி வெளியேறியவர்களையும் சேர்த்து, அழைத்துக் கொண்டு வெளியேறப் போகிறோம்.
இங்கு நடக்கும் இறுதிக் கூட்டத் தொடர் இது என்பதால், இந்த சபையின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.டில்லியில் உள்ள செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மொகாலய பேரரசின் மிகப்பெரிய சின்னம்.
அதைப்போல, சென்னையில் உள்ள இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சின்னம். 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக் கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. கடந்த 1678ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத் தொன்மையான, "புனித மேரி ஆலயம்' கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் தான், 1753ல் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்தது. 1687 முதல் 1692 வரை, கவர்னராக "யேல்' இருந்த போது தான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டைக் கொடிமரத்தில், கம்பெனி கொடிக்குப் பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.கடந்த 1919ல், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன், தற்போதைய சட்டசபைக் கூட்ட மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. எனவே, இதற்கும் ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடலாம் போல் தெரிகிறது.
ஓமந்தூராருக்குப் பின், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் இந்த கோட்டையில் முதல்வராக வீற்றிருந்திருக்கின்றனர். 1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்ற நான், 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்துள் ளேன்.அதன்பின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தமிழக சட்டசபையில், சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானங்கள், சட்டங்கள், முடிவுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெற வழி செய்யும் தீர்மானம், 1921ல் நிறைவேறியது. ஆதிதிராவிடர்களை, "பஞ்சமர், பறையர்' என்ற சொற்களால் குறிப்பிடுவது அரசு ஆவணங்களில் தவிர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் 1922ல் நிறைவேறியது.
ஆலயங்கள் நுழைவுச் சட்டம் நிறைவேறியதும் இந்த சபையில் தான்.இந்த சபையில், தமிழக மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப சட்டங்களை வகுப்பது, ஆட்சியை நடத்துவது என்ற முறை அன்று இருந்தது. அது இன்றைக்கும் இருக்க வேண்டுமென்ற முனைப்போடு தான், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளோம்.ஒரு கருத்தைச் சொன்னால், அதனால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும், ஆகவே அந்தக் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, அக்கருத்துக்களை சொல்வது தான் சிலாக்கியமானது என்பதை உணர்ந்து, நான் அறிந்தவரையில் எனது வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.
அதை இந்தச் சட்டசபையிலும் கடைபிடித்து வருகிறேன். இந்த சபையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அவை எனனென்ன என்று பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை.அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் குடி செல்லும் புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு, மக்களை பற்றிய நினைவுடன் நமது பணியை அங்கு துவங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
செய்தி: நன்றி: தினமலர்
More Links
TN Assembly
Chronology - Fort.St.George
State Legislature - Origin and Evolution
Thursday, December 10, 2009
மஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்
தூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.
மளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.
நவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
மஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.
செய்தி: படம்: நன்றி: தினகரன்
Tuesday, December 8, 2009
அரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்
முதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.
இந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.
அப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.
இதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-
ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
செய்தி: நன்றி: மாலைமலர்
