Thursday, December 10, 2009

மஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்

தூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.



மளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.

நவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

மஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

No comments: